Tuesday, January 1, 2008

நாங்களும் எழுதுவோம் - members OWN creations

சிங்கார மண்டலங்கள்



சிரங்கூன் சாலை ஓரங்களும்,
சீர் தூக்கும் முஸ்தபா வளாகமும்,
சிங்கப்பூரின் மூச்சையடக்கும்
சிங்கார மண்டலங்கள்.

ஆம்
இங்கு தான்
இந்தியர்களின் வியர்வைகள
இன்பத்தால் சுத்திகரிக்கப்படுகிறது.

இங்கு தான்
திரவியம் தேடி வந்தவனுக்கு,
தைரியம் கிடைக்கிறது.

இங்கு தான்
பிரதி ஞாயிறுதோறும்
பிறையாய் இருந்த வயிறுகள்
பௌர்ணமியாய் முழுமைபெறுகின்றன.

மண்ணை விட்டு வந்த
மண்ணின் மைந்தர்களுக்கு
எந்த மண்ணிலும்
இந்த இன்பங்கள்
எல்லையின்றி கிடைக்காது
என்பதால்,
மண்ணை நினைவூட்டும்
இந்த சிங்கையின்
சிங்கார மண்டலங்களுக்கு
சிறப்பு நன்றிகள்.



---ஆ.அருள் சோலை




புத்தாண்டுச் செய்தி

கந்ததாசன்

இனிய பயணம்

ப்ளோக் ல் முதல் பதிப்பில் என்ன எழுதலாம், எப்படி எழுதலாம், எப்படி எழுதினால் சுவையா இருக்கும்? நடந்ததை எழுதலாமா இல்லை நடக்க போவதை எழுதலாமா என்று பலவாறான யோசனைகள்.இப்படி எத்தனை கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்பதில் மட்டும் ஒரு சின்ன எல்லையை அல்லது சின்ன தலைப்பை என்னால் முடிவு பண்ண முடியவில்லை. இப்படி இந்த மாதத்தின் இருபத்தி ஐந்து நாட்கள் நாள்காட்டியில் கிழிக்கப்பட்டது. நாம் முதல் பதிப்பிற்கே எழுத இவ்வலவு சிரமப்படுகிறோம், வேறு ஒன்றும் இல்லை தமிழ் டைப்பிங் தானுங்க... என்றாலும், வருடத்தின் முதன் நாளில் இப்படியொரு இனிய பயணம் அந்த வருடமெல்லாம் வசந்தமே என்று நெஞ்சுக்குள் ஒரு சந்தோசம்.

நடந்தது எல்லாம் இப்போது நினைக்கையில் மங்கலான கனவுகளாய் தெரிகிறது. நடக்கபோவது எல்லாம் இழுக்க இழுக்க நீளும் ரப்பராய் நீண்ட கனவுகளாய் கானல் நீராய் இருக்கிறது. முன்னாலும் பின்னாலும் கனவுகளை சுமக்கும் மனிதன்,வாழ்க்கை எல்லாம் கனவுகளை போலவே போகிறது, முன்னால் நகரும் போது பின்னால் ஓடி கரைகின்ற புகைவண்டி புகைகளாய்.

ஓசோன் மண்டலம் ஒரு பக்கம் கிழிந்து போய் மழைக்காலங்களில் வெய்யிலையும் வெய்யில் காலங்களில் குளிரையும் மாற்றித் தந்து தட்ப வெட்பத்தில் கால்பந்து விளையாடுகிறது. ஒரு பக்கம் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் காடுகள் கான்கிரீட் சுவர்களாகிறது. இப்படியே காடுகள் இடிக்கப்பட்டால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் இந்த கான்கிரீட் கட்டடங்களை கண்டு மழைபெய்யுமா இந்த வானம்? ஓசோ சொன்னதை போல இயற்கையை நாம் மதித்தால் அது நம்மை அரவணைக்கும். முடிந்தவரை உங்கள் வாழ்நாளில் ஒரு ஆயிரம் மரங்களையாவது நடுங்கள். இல்லையென்றால் எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள்.

புதியதாய் பிறக்கும் ஒரு வருடம் நமக்கு ஒரு வயதை மட்டுமா தருகிறது. புதிதாய் போடப்பட்ட ஒரு சாலையிலே போகின்ற வண்டிகள் தரும் தடங்களை போல எத்தனை எத்தனை படிப்புகளை சொல்லித் தருகிறது. அடுத்தவரின் தவறுகளை இங்கே பட்டியலிட்டுகொண்டே சமாதியாககுவதை விட, வாழும் ஒவ்வொருவரும் ஒன்றை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். அது புதிய ஒன்றை கண்டுபிடிக்க இல்லையென்றாலும் பழையதை அழிக்காமல் இருத்தல் பெரியது.

யாருமே இல்லாத ஒரு நாளிலே உக்கார்ந்து யோசித்தால் இப்படித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள் தூளியில் ஆடுது. சில சமயம் நமக்கு முன்னால் நடக்கும் சில விதி மீறல்கள், படி தாண்டல்கள் நமக்கு இதயத்தின் அதிகபட்ச துடிப்புகள் கணக்கிட உதவுகிறது. இந்தியன் கமலாய், அன்னியன் விக்ரமாய் தலைவிரித்து கற்பனையில் குதிரையோடு பறக்கிறது.

நமக்கு நாமே கோடுகளை இட்டு, உற்றோர் உறவினர் என்று இல்லாமல் எல்லோரும், உலகில் வாழும் ஒற்றை ஜாதி மலரிலிருந்து அதை பிறக்க வைக்கும் சூரிய பிரபு வரை சுகத்தோடு இருக்க, ஆசை,கோபம்,களவு,தெரிந்த பேசத் தெரிந்த மிருகம் என்று இல்லாமல், பல வண்ண அரிதரங்கள் பூசி நாலு பேரை அழ வைப்பதை போல, களுக்கென முகிழ்க்கும் உதட்டு மலரின் புன்னகை கொண்டு நெஞ்சமெலாம் வாழ்த்தி, புறாக்களில் மட்டுமல்ல இதயங்களிலும் அமைதியை, இமயம் போகும் வழியெல்லாம் காற்று உங்களுக்கு வாசனை தந்து தடையென நிற்பவை எல்லாம் தடமில்லாமல் போகிட, போகியில் தீயிட, பரமபத ஏணிகளில் ஏறி, பாம்புகளில் தப்பித்து, வாழ்க்கை தாயத்தில் வாகை மலரது சூடி, "எழும் சிறு பொறி மிகப் பெருந்தீயாய்!" எனக்கு அறுபது அடுத்தோற்கு நாப்பது என எல்லாம் ஒதுக்கி(கட்டாயம் இல்லை நம்மால் முடிந்ததை), வாழ்வில் மகிழ்ச்சி, மனத்தில் எழுச்சி எண்ணி என்றும் சிறப்பாய் வாழ இந்த ஆண்டு வேண்டும் என வேண்டியது எல்லாம் கிடைத்து வாழ வைக்க வேண்டுகிறேன்.



அன்புடன்,


கந்ததாசன்.

1 comment:

lankii said...

Kandhadhasan, keep writing..janaghanamana'vin S.R.K nee thaanyaa